கோவை:
கோவை மணியக்காரன் பாளையத்தைச் சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் ரிதன்யா சிவராம் (17), தி இந்தியன் பப்ளிக் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கிய வாழ்வை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக ‘வைப்ரன்ஸ் ஹப்’ www.vibrancehub.org என்ற இணைய தளம் மற்றும் மொபைல் ஆப் உருவாக்கியுள்ளார்.
இந்த தளம் மாணவர்கள் திட்ட அடிப்படையிலான கற்றல் மூலம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை அனுபவ ரீதியாக கற்க உதவுகிறது.


ரிதன்யா கூறுகையில்:
“செயற்கை நுண்ணறிவு காலத்தில் தகவல்கள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை சிந்தித்து படைப்பாற்றலாக மாற்றும் வழிகாட்டி தேவைப்படுகிறது. அதற்காகவே வைப்ரன்ஸ் ஹப் உருவாக்கப்பட்டது,” என்றார்.
வைப்ரன்ஸ் ஹப், அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் முழுக்க கிண்டர்கார்டன் பிரேம் ஒர்க் என்ற “ஆர்வம், திட்டங்கள், தோழமை, விளையாட்டு” என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டது. இது கல்வியை புத்தக அறிவை மட்டும் வழங்கும் ஒரு முறை அல்லாது, சிந்தனை திறன், தன்னம்பிக்கை, மற்றும் குழு ஒத்துழைப்பு ஆகியவற்றை வளர்க்கும் கருவியாக வலியுறுத்துகிறது.
அட்டல் டிங்கரிங் லேப்ஸ் எண்ணத்தையும் இணைத்துப் புதிய தொழில்நுட்ப கற்றலை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


வைப்ரன்ஸ் ஹபில் மாணவர்கள் குழுவாக இணைந்து திட்டங்களை உருவாக்கலாம்.
வாரந்தோறும் பிரச்சனை தீர்க்கும் அமர்வுகள், ஆரோக்கிய பராமரிப்புக்கான வழிகாட்டுதல், மேலும் “ரஸ்டி” என்ற செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட் பாட் உரையாடல் உதவியாளர் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
“பாரம்பரிய கல்வி மாணவர்களை தகவல் கற்றுக்கொள்ள வைக்கிறது. ஆனால் மேக்கர் கல்வி அவர்களை சிந்திக்கவும், உருவாக்கவும் கற்றுக்கொடுக்கிறது.குறிப்பாக
சொல்வதென்றால், ‘ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது’ என்பது போல, மாணவர்கள் புத்தக அறிவோடு மட்டுமல்லாமல், செயலில் அதை வெளிப்படுத்த வேண்டும்; அதற்கான தளம் தான் வைப்ரன்ஸ் ஹப்” என்றார்.இதில் மாணவர்கள் தங்கள் திட்டங்களுடன் சேர்த்து தூக்கம், மன அழுத்தம், எண்ணப்பதிவுகள் போன்றவற்றையும் பதிவு செய்யலாம்.
“தேசிய கல்வி கொள்கை 2020 ஒரு புதிய இந்தியாவை உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த திட்டத்திற்கான தொழில்நுட்ப அடித்தளத்தை அமைக்கிறது வைப்ரன்ஸ் ஹப்,” என ரிதன்யா தெரிவித்தார். “மாணவர்கள் நீண்டகாலம் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், படைப்பாற்றலுடன் செயல்பட வைக்கும் சமூகத்தை உருவாக்குவதே எங்கள் நோக்கம்,” என்றும் கூறினார்.
இத்தளம் மாணவர்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *